பாரதிதாசன்
- “பாவேந்தர்” பாரதிதாசன் அவர்கள் தமது இளம் வயதிலிருந்தே தமிழ்மொழி மீது தணியாத தாகமும் பற்றும் கொண்டிருந்தார். மகாகவி பாரதியார் அவர்கள் புதுவையில் தங்கியிருந்தபோது, அவருடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார். பாரதியாரின் கவிதைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டு அவர் போலவே இனிய கவிதைகளை எழுதினார். பாரதியார் அவர்களைத் தம் வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டு, பாரதிதாசன் எனத் தம் பெயரையே மாற்றிக் கொண்டார்.
- பாரதிதாசன் அவர்கள், தமிழாசிரியர், தமிழ்க் கவிஞர், திரைக்கதை ஆசிரியர், எழுத்தாளர் என்று பல்வேறு துறைகளில் தமிழ்மொழியின் இனிமையை மக்களிடம் எடுத்துச் சென்றவர். பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் 86-க்கும் மேற்பட்ட நூல்கள், கதைகள், கட்டுரைகளைப் படைத்துள்ளார். அவரது ‘பிசிராந்தையார்’ நாடகத்திற்காக 1970-ஆம் ஆண்டு ‘சாகித்திய அகாடமி விருது’, வழங்கப்பட்டது.
- ‘எங்கள் வாழ்வும் எங்கள் வளமும், மங்காத தமிழென்று சங்கே முழங்கு’, “தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” போன்ற பல்வேறு காலத்தால் அழியாத பாடல்களை படைத்துள்ளார். தம் படைப்பாற்றல் மூலம் தமிழுக்குப் பல வழிகளில் தொண்டாற்றி, தமிழ் இனத்திற்கு எழுச்சியூட்டிய பாவேந்தர் பாரதி தாசன் அவர்கள் 1964-ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.
தமிழ் வார விழா: ஏப்ரல் 29 - மே 5, 2025
- தமிழ் மொழியின், தமிழ் இனத்தின் சிறப்பை உலகிற்கு எடுத்துரைத்த பாவேந்தர் பாரதிதாசன் அவர்களை சிறப்பிக்கும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 22.4.2025 அன்று சட்டமன்ற பேரவையில், விதி எண்.110-ன் கீழ்,‘பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ஏப்ரல் 29 முதல் மே 5 வரை தமிழ் வார விழா கொண்டாடப்படும்’எனவும், இவ்விழாவில் கவியரங்கங்கள் மற்றும் இலக்கிய கருத்தரங்குகள், பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருது, தமிழ் இலக்கியம் போற்றுவோம், பள்ளிகளில் தமிழ் நிகழ்ச்சிகள், தமிழ் இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் கொண்டாடப்படும் என அறிவித்தார்.
- தமிழ் வளர்ச்சித்துறை, செய்தித்துறை, கலை பண்பாட்டுத்துறை என பல்வேறு அரசு துறைகள் இணைந்து இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தன. அதன்படி, மாநிலம் முழுவதும் தமிழ் வார நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
- தமிழ் வார விழாவின் நிறைவு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் 5.5.2025 அன்று நடைபெற்றது.
- இந்நிகழ்வில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் கவிக்கோ அப்துல் ரகுமான், எழுத்தாளர் மெர்வின், ஆ.பழநி ஆகியோர்களின் நூல்கள் நாட்டுடைமை செய்து அவர்களின் மரபுரிமையினருக்கும், கொ.மா. கோதண்டம் மற்றும் புலவர் இலமா தமிழ்நாவன் ஆகியோர்களின் நூல்கள் நாட்டுடைமை செய்து அவர்களுக்கும் நூலுரிமைத் தொகையாக தலா 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையினை வழங்கினார்.
- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசால் 4 ஆண்டுகளில், தமிழறிஞர்களின் படைப்புகள் உலக மக்கள் அனைவரிடமும் சென்று சேர வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு, மறைந்த முதல்வர் கருணாநிதி அவர்களின் அனைத்து நூல்களும் நூலுரிமைத் தொகை ஏதுமின்றி நாட்டுடைமையாக்கப்பட்டது.
- மேலும், தமிழறிஞர்கள் நன்னன், சிலம்பொலி செல்லப்பன், விடுதலை ராஜேந்திரன், பேராசிரியர் இரா. குமரவேலன், மம்மது உள்ளிட்ட 32 அறிஞர்களின் 1,442 நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு, அதற்கான நூலுரிமைத் தொகையாக 3 கோடியே 79 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கப்பட்டுள்ளது.
No comments
Post a Comment